திங்கள், 3 டிசம்பர், 2012

வடகாட்டில் வாலிபால் போட்டி



  


வடகாட்டில் வாலிபால் போட்டி
 அன்புத்தங்கம் அணிக்கு முதல்பரிசு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் வடகாடு அன்புத்தங்கம் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது.
     வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகம் சார்பில் கைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. பகல் ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். 
நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசைப் பெற்ற வடகாடு அன்புத்தங்கம் அணிக்கு ரூ. 3001,  இரண்டாம் பரிசை பெற்ற வடகாடு கணேசன் நினைவு அணிக்கு ரூ. 2501, மூன்றாம் பரிசைப் பெற்ற கீரமங்கலம் அணிக்கு ரூ. 2001, நான்காம் பரிசைப் பெற்ற வடகாடு அண்ணா கைப்பந்து கழகம் அணிக்கு ரூ. 1501 மற்றும் ஐந்தாம் பரிசைப் பெற்ற பனங்குளம் அணிக்கு ரூ. 1001-னுடன் பரிசு பெற்ற அனைத்து அணிகளுக்கும் மறைந்த வாலிபால் பயிற்சியாளர் கணேசன் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.
    வீரர்களிடையே தள்ளு, முள்ளு..
   பனங்குளம் அணிக்கும், வடகாடு கணேசன் நினைவு அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றபோது, நடுவரின் தீர்ப்புக்கு பனங்குளம் அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்துகொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் பனங்குளம் அணியைச் சேர்ந்த மாறன் என்பவரால் அடிக்கப்பட்ட பந்து அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த நடுவரை நோக்கி சென்றது. நடுவர் சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டதால் நடுவர்மீது பந்து படவில்லை. இது திட்டமிட்ட செயல் என, அங்கிருந்த வீரர்கள் பனங்குளம் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணியினருக்கும் இடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது.  இதனால் மற்றொரு ஆட்டத்தில் பனங்குளம் அணியினர் கலந்துகொள்ளாமல் வெளியேறியதால் மைதானத்தல் பரபரப்பு ஏற்பட்டது. 






                                                                               
        

                                                                               
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக