புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பருவமழை பொய்த்துப்போனதால் வாடிய பயிரைக் காப்பாற்ற மழை பெய்ய வேண்டி முனிசாமிக்கு கோழிகளை பலியிட்டு விவசாயிகள் பூஜை போட்டனர்.
வடகாட்டில் நெடுங்குளம், பள்ளிகுளம், கூடப்பள்ளம், கோப்பன்குளம் உள்ளிட்ட குளத்தின் தண்ணீரைக்கொண்டு பள்ளத்திவயலில் ஏறத்தாழ 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் அவ்வப்போது பெய்த மழைக்கு உழுது நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அதைத்தொடர்ந்து மழை இல்லாததால் குளங்கள் வறண்டுவிட்டது. வயல் பகுதியானது பாலம், பாலமாக வெடித்துள்ளதுடன் நெல்பயிரும் காய்ந்து சருகாக மாறியுள்ளது.
இதையடுத்து பள்ளத்திவயலின் மேல் கரையில் உள்ள முனிக்கோவில் பூஜை போட்டால் மழை பெய்யும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கை. இதை ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வருகின்றனர்.
இதையடுத்து இந்த வருடம் இதுவரை போதிய அளவு மழை பெய்யாததை அடுத்து வயலில் சாகுபடி செய்த விவசாயிகள் கோழிகளை கோவிலுக்கு கொண்டுவந்து பலியிட்டு, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல், தொடர்ந்து பூஜை போடப்பட்டு வருகிறது.
உத்தரவு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி:
பூஜை போட்டுவிட்டு மழை வருமா, எப்போது மழை வரும் என்று அங்குள்ள ஆலமரத்தில் கோவில் பூசாரிகளுடன் விவசாயிகள் தரையல் அமர்ந்து நிமித்தம் கேட்டனர். நீண்ட நேரமாகியும் எந்த திசையிலும் பல்லி கத்தாததால் உத்தரவு கிடைக்கவில்லை என முடிவுக்கு வந்தனர். இதனால் தொடர்ந்து வறட்சியே நீடிக்குமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது. இச்செய்தி பரவலாக வடகாடு பகுதியில் பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக