புதன், 19 டிசம்பர், 2012

விபத்தில் காயம் அடைந்த புதுமாப்பிள்ளை பலி துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் பலியானார். திருமணமாகி 15 நாளில் நடந்த பரிதாபம்



புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் திருமணமாகி 15 நாளில் விபத்தில் காயம் அடைந்த புதுமாப்பிள்ளை இறந்தார். துக்கம் விசாரிக்க வந்தவர் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வடகாடு ஊராட்சி பரமநகர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன். இவரது மகன் இளங்கோவன்(31). இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகள் தனம் ஆகியோருக்கும் நவ.30-ம் தேதி வடகாட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வருதற்காக டிச. 14-ம் தேதி மோட்டார் சைக்கிளில் இளங்கோவன் சென்றுள்ளார். அப்போது, அம்மையாண்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இளங்கோவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான சூழலில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்ற இளங்கோவன் புதன்கிழமை இறந்தார்.
    இறந்தது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயல் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் வடகாடுக்கு இளங்கோவன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த உறவினர்களுடன் இவரும் அழுது உருண்டு புறண்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 அவசர வாகனம் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிறிது நேரத்தில் ஜெயபால் இறந்துவிட்டார். இறந்த ஜெயபால் விபத்தில் இறந்த  இளங்கோவனின் மனைவி தனத்தின் உறவினராவார். புதுமாப்பிள்ளை இறந்ததும், அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து உறவினர் இறந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக