புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இரண்டு கரும்பு அரைவை ஆலையின் எல்லை பிரச்னையால் உரிய நேரத்தில் கரும்பை அறுவடை செய்யவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள சம்மட்டிவிடுதி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் குரும்பூர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலையின் மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள் ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழாண்டு அந்தப் பகுதியானது தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையின் எல்லைக்குள்பட்ட பகுதி என்பதால் அப்பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள கரும்பை எங்கள் ஆலைக்கே கொடுக்க வேண்டுமென அந்தஆலையின் அலுவலர்கள் விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் சர்க்கரை ஆலை அலுவலர்கள் விதைக்கரும்பு, உரம், மானியம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டிருப்பதால் எங்கள் ஆலைக்கே கொடுக்க வேண்டுமென அதே விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்ய இரு ஆலைகளிலும் இருந்து அடுத்தடுத்து உத்தரவை அளித்துள்ளனர். அதன்படி, கரும்பை தொழிலாளர்கள் மூலம் அறுவடை பணி தொடங்கியது. கரும்பை ஏற்றிக்கொண்டு செல்ல இரு ஆலைகளில் இருந்தும் லாரியும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் குழப்பம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் எந்த லாரியிலும் ஏற்றாமல் பிரச்னையை முடித்தால் மட்டுமே ஏற்ற முடியுமென வலியுறுத்தி லாரியில் ஏற்ற மருத்தனர். இதனால் கரும்பு தோட்டத்தில் இரு ஆலை நிர்வாகத்தினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எல்லை வேறுபட்டிருந்தாலும் விவசாயிகளின் விருப்பத்தின்படி குரும்பூர் ஆலை மூலம் பல ஏக்கரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாகுபடியின் தொடக்கத்தில் தடுத்து, அந்த விவசாயிகளிடம் குருங்குளம் ஆலை நிர்வாகத்தின் ஆலோசனையில் சாகுபடி மேற்கொண்டிருக்கலாம். அதற்குமாறாக எங்கள் ஆலோசனையில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடைக்கு தயாரானபோது எல்லை பிரச்னை மூலம் சொந்தம் கொண்டாடுவது அர்த்தமற்றது என குரும்பூர் ஆலை நிர்வாகத்தின் சார்பி்ல் தெரிவிக்கப்படுகிறது.
எல்லை எங்களுக்கானது அதில் சாகுபடி மேற்கொண்டது தவறு, ஆகையால் இங்கு விளைவிக்கப்பட்டுள்ள கரும்பை எங்கள் ஆலைக்கே அனுப்பி வைக்க வேண்டுமென குருங்களம் ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஆர்.வீரப்பன் கூறியது. கடந்தஆண்டு குரும்பூர் ஆலையின் மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தடுக்காத குருங்குளம் ஆலை நிர்வாகம் இப்போது தடுக்கின்றனர். இரு நிர்வாகத்தினரும் ஒரு முடிவெடுத்து அறுவடை செய்து வெயிலி்ல் காயும் கரும்பை ஏற்றிச்செல்ல வேண்டும். அண்மையில் இதேபகுதியிலிருந்து குரும்பூர் ஆலைக்கு ஏற்றிச்சென்ற கரும்பு லாரியை மறித்து குருங்களம் ஆலை நிர்வாகம் தகராறு செய்ததால் தற்போது லாரியில் ஏற்ற அச்சமாக இருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். காலம் தவறியும், வெயிலில் கரும்பு காய்வதால் அதற்கான இழப்பையும் ஆலை நிர்வாகம் அளிக்க வேண்டும். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக