திங்கள், 3 டிசம்பர், 2012

செல்பேசியால் சிதறும் கவனம்


சாலை விபத்துகளில் ஓட்டுநர்களின் கவனக் குறைவால் ஏற்படும் விபத்துகளுக்கு மூலமாக செல்போன் மற்றும் போதைப்பொருளாக இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டுமென அரசு எச்சரித்துள்ளது.
     பேருந்தில் உள்ள பயணிகளை சென்றடைய வேண்டிய இடத்தில் கொண்டு சேர்ப்பது ஓட்டுநரின் கடமையாகும். ஆனால், பொறுப்பமிக்க அவரோ, பேருந்து வேகமாக சென்றுகொண்டிருக்கும்போதே போதைபொருள் மற்றும் புகை பொருள்களை உபயோகிப்பதும், செல்போனில் பேசுவதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது.
        இதன்விளைவு பேருந்துக்குள் இருக்கும் பயணிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துவதோடு அச்சத்தையும் ஏற்படுத்தி மரணத்துக்கு கொண்டுசேர்க்கிறது. புகை மற்றும் போதையை உண்டாக்கும் பாக்குகளை பயன்படுத்துவதால் பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்படுகிறது. ஓட்டுநரை தட்டிக்கேட்க முடியாததால் பலர் மூக்கை மூடிக்கொள்கின்றனர்.
     இவைகளெல்லாம் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ள அப்பேருந்துக்குள்தான் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் நடத்துநரும் மீறுகிறார். அதுமட்டுமின்றி ஓட்டுநர் அருகேயுள்ள இஞ்சின், கண்ணாடி ஓரத்திலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்களிடம் பேசிக்கொண்டேயும் பேருந்தை இயக்குகின்றனர். கிராமப் புறங்களில் சுமைஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்களில் பெரும்பாலானோருக்கு ஓட்டுநர் உரிமம் இருப்பதில்லை. இதுபோன்றவர்களை வாகனங்களை இயக்க அனுமதிப்பதால்தான் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 
  இதை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளும் போலீஸார் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலர்கள் பேருந்துகளைத் தவிர பிற வாகங்களை நிறுத்தி தன் பாக்கெட்டை மட்டும் ரொக்கத்தால் நிரப்பிக்கொண்டு சோதனையை முடித்துக்கொள்கின்றனர். 
    ஒழுக்கமற்றோரிடம் பெறப்பட்ட சில நூறு ரூபாயானது அப்பாவிகளை பலிகிடாயாக்குறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எந்த வாகனத்தை இயக்கினாலும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். அதை மீறுவோருக்கு உரிய தண்டனையை அதற்கான அரசாணைப்படி நிறைவேற்ற வேண்டும். மீறுவோர் மீது விதிக்கப்படும் தண்டனை தவறுகளை கட்டுப்படுத்தும் விதமாக அமையவேண்டுமென்பதே  அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக