புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி மல்லிகைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் மு. ரெங்கசாமி (வயது 53). ம.தி.மு.க. வின் மேலவை பிரதிநிதியான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இவருக்கு திருமணத்துக்கும் முன்பு இருந்தே மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ-வின் கோரிக்கையை ஏற்ற ரெங்கசாமி கடந்த 4 மாதங்களாக குடி பழக்கத்தை நிறுத்தியுள்ளார். அதற்காக வடகாட்டில் பாராட்டுவிழா நடைபெற்றது.
பாராட்டுவிழாவுக்கு வடகாடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாத்தையா தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற உறுப்பினர் அன்பழகன், ஏ.வி. பேரவை நிர்வாகிகள் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து குடியை நிறுத்திய ரெங்கசாமி பேசியது.
நான் ம.தி.மு.க.கட்சியின் பொறுப்பாளராக இருந்தாலும் தொடர்ந்து விவசாயம் தொடர்பான கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் தொகையை தனது செலவுக்காவே பயன்படுத்தினேன். 30 வயத்தில் தொடங்கிய இந்த குடிப் பழக்கம் 23 ஆண்டுகள் நீடித்தன.
கரூரில் கட்சி சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றபோது அங்கு மதுவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். அதேபோல, தெருத் தெருவாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது வேண்டுகோள்படியே மதுகுடிப்பதனால்தான் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிகமாக நடக்கின்றன. மதுக்கடைகளை பூட்டுவது அரசின் கொள்கை. ஆனால், வை.கோ.வின் கொள்கையை ஏற்று நாம் குடிக்காமல் இருந்தால் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்பதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மதுவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டேன். அதன்பிறகு மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றபோது இதற்கு மேலும் குடித்திருந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் கூறினார். மதுவை நிறுத்தியதால் கடந்த 4 மாதங்களாக மனநிம்மதியாக இருக்கிறேன். என்னிடமும் பணம் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பிருந்தே குடித்தேன் அதனால் எனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம்தான் நான்போதைக்கே அடிமையாகிவிட்டேன். தற்போது மனஉறுதியுடன் மதுவை கைவிட்டேன். நிம்மதியாக இருக்கிறேன். ஆகையால், உரிய உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தன்னம்பிக்கையுடன் இருந்தால் மதுகுடிக்கும் எண்ணமும் வராது, நம்மையும் இச்சமுதாயம் மனிதனாக மதிக்கும் இவ்வாறு பேசினார்.
பாராட்டுவிழாவில் ஏ.வி. பேரவை நிர்வாகிகள் ராஜேஸ், பிரபாகரன், கோபு, செந்தமிழ்ச்செல்வன், பத்மநாதன், வடிவேல், சுப்பிரமணியன், கப்பல்சிவா மற்றும் பலர் கலந்துகொண்டு ரெங்கசாமியை வாழ்த்திப்பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக