வெள்ளி, 15 மார்ச், 2013

காங்க. திமுவை நெருக்கடிக்குள்ளாக்கும் அதிமுக எம்எல்ஏ


புதுக்கோட்டைமாவட்டத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் வைத்துள்ள பதாகையானது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்டியை ஏற்படுத்தியுள்ளது.
      ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள ஐ.நா. வின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் திமுக, விடுதலைச்சிறுத்தை கட்சியினர் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை(12.03.2013) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்நிலையில் ஆலங்குடியில் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) குப கிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் டி.எல். ரத்தினம், நெவளிநாதன் ஆகியோர் சார்பில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களையின் உறுப்பினர்கள் இலங்கை அதிபருக்கு மரியாதை செலுத்துவது, அவரிடம் இருந்து பரிசு பெறுவது போன்ற படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது.
  இப்பதாகை தங்கள் கட்சியை இழிவுபடுத்துவதாக கருதிய திமுகவினர், பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறை அலுவலர்கள், ஆலங்குடி வட்டாட்சியர் ஸ்டாலினுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பதாகை அகற்றப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மீண்டும் அதே இடத்தில் அதே பதாகையை வைத்தனர். இதனால் அதிமுக, திமுகவினரிடையே மறைமுகமாக தாக்குதல் ஏற்பட்டது.
   இந்நிலையில் மத்திய அரசை ஆதரித்துவரும் கருணாநிதி தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோது இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர், அதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் வருகையின்போது இந்தியாவில் உற்சாக வரவேற்பு, சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பியது, டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யாதது என ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும். இதையே இந்த பதாகை உணர்த்துகிறது என்றார் குப கிருஷ்ணன்.
   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ, பழ.நெடுமாறன், சீமான், பாவாணன், குளத்தூர்மணியன், காசிஆனந்தன், மணியரசன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரால் பலமுறை ஈழஆதரவாக பலமுறை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பது    இப்பகுதியினரின் தமிழ்உணர்வை பறைசாற்றுகிறது.
  மேலும், மத்திய நிதிஅமைச்சரின் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினரே ஈழத்தமிழர் உணர்வாளர்களுக்கு ஆதரவாக பேசிவருவதும், இதுபோன்று பதாகை வைத்திருப்பதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக