ஆலங்குடி, ஆக. 10:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விலையில்லா திட்டத்தை முடக்கும் நடநடிக்கையே மத்தியஅரசின் நேரடிமானியத்திட்டமென்றார் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன்.
ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மேலநெம்மக் கோட்டையில் புதிய பகுதி நேரஅங்காடியை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது
நேரடி மானியத்திட்டத்தின் மூலம் கொடுக்கும் பணம் கிலோ அரிசிக்கு ரூ. 3 வீதம் 20 கிலோவுக்கும் ரூ. 60- ஐ மத்திய அரசு கொடுத்தால் அதைக்கொண்டு அரிசி வாங்கிவிடமுடியுமா?. இதேநிலைதான் இதர உணவுப்பொருள், எரிபொருளுக்குமாகும். இதெல்லாம் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்தில் செல்படுத்தப்படும் விலையில்லா திட்டங்களை முடக்கவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏழைகளின் வறுமை ஒழியாது. மேலும், இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டது, டாலர் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகள் பாதிப்பில் அக்கறைகொள்ளாதது இவைகளெல்லாம் மத்திய அரசின் நிர்வாகத்திறமையின்மையின் அடையாளமாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
401 அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரேஷன் கடை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருநாள்கள் முழுநேரமும் செயல்படுமென தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக மேலக்கோட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் துரைதனசேகரன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன், வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவர் எம். ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆர். பரமசிவம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கத் தலைவர் கே.எஸ். சரவணன், மாவட்ட பால்வள சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக