செவ்வாய், 4 ஜூன், 2013

வடகாடு பகுதியில் மரங்கள் வளர்த்தும் மழை இல்லை: விவசாயிகள் அதிர்ச்சி :இயற்கை மாறுபாட்டை ஆய்வு செய்ய கோரிக்கை

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுவதால் பல ஆண்டுகளாக மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன்தாக்கம் இப்பகுதியில் மா, தென்னை, பலா மரங்கள் தோப்புகளாக பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் பலா மரங்கள் அதிகமாக இருப்பதன் விளைவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வேம்பு, தேக்கு, பூவரசு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரம் வளர்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழை அதிகமாகவே பெய்துள்ளது. மரம் அதிகரிப்பதால் மரச்சந்தையும், மரம் வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அனேக இடங்களில் கோடை மழை பெய்தது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகின்றனர். ஆனால், மரம் நட்டால் மழை பெய்யும் என்பார்கள், இந்தப் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கப்படுகிறது. மேலும், மரங்களை வளர்த்து வனங்களாக மாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பகுதிக்கு மழைபெய்யாமல் மரம் குறைவாக உள்ள பகுதிக்கும், மரங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டுமே அதிகமாக உள்ள நகர் பகுதிக்கும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலை நீடித்தால் குடிக்கூட தண்ணீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து விவசாயி மாங்காடு வினோத் கூறியது.
 மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுவதால் கோடையின் தாக்கம் மற்ற பகுதிகளைவிட குறைவாகவே இருக்கும். அதற்கு சான்றாகவே மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகு இங்குள்ள தோப்புகளில் உள்ள மரறங்களில் கொடியாக ஏற்றி வளர்க்கப்படுகிறது. குளிர் பிரதேசங்களைப்போலே இங்கு மிளகு நல்ல விளைச்சலை ஈட்டுகிறது. அப்படி இருக்க கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் குறைந்துவிட்டது. அதேபோல, இந்த ஆண்டு கோடைமழை முற்றாக இல்லாதிருப்பது எதிர்காலத்தில் குடிநீர் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்,  பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென அச்சம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து அரசு விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இயற்கை இடற்பாடுகளில் இருந்து போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுவே இப்பகுயினரின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக