
வடகாடு-கொத்தமங்கலம் இடையே உயர்நிலைப்பாலம் அமைக்கப்படுமா?
வடகாடு மற்றும் கொத்தமங்கலம் இடையே மழைகாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அம்புலி ஆற்றின் தரைப்பாலத்தை உயர்நிலைப்பாலமாக அமைக்க வேண்டுமெ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையின் கிழக்குப்பகுதியில் திருவரங்குளம் வனப்பகுதியில் மழைகாலத்தில் வழிந்தோடும் மழைநீர் ஒன்றிணைந்து கால்வாய் மூலம் ஆங்காங்கே உள்ள குளங்களை நிரப்பியும், அதில் மிதமிஞ்சிய தண்ணீர் ஆலங்குடியின் புறநகரில் அம்புலி ஆற்றில் கலந்து அங்கிருந்து வடகாடு, நகரம் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் மழைகாலத்தில் வடகாட்டுக்கும் கொத்தமங்கலத்துக்கும் இடையே சாலையின் குறுக்கே அய்யனார்கோயில் அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் நிகழாண்டு பெய்த மழைக்கு சுமார் 5 அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மறுபுறம் செல்லமுடியாமல் இருபுறமும் மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கொத்தமங்கலம், குளமங்கலம் வழியாக வடகாடு,அறந்தாங்கி இடையே இயக்கப்பட்ட தடம்எண்(17) நகர் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிள், கனரகவாகனங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக பையோடு சைக்கிளையும் தலையில் சுமந்துகொண்டு கடந்து செல்கின்றனர்.
இதனால் வடகாட்டில் இருந்து 5 கிலோமீட்டரில் உள்ள கொத்தமங்கலத்துக்கு செல்ல ஆலங்குடி வழியாகவும், ஆவணம்-கைகாட்டி, கீரமங்கலம் வழியாகவும் என எந்த வழியில் சென்றாலும் ஏறத்தாழ 20 கிலோமீட்டர் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது.
மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு வடகாடு-கொத்தமங்கலம் இடையே மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைப்பாலத்தை மாற்றி அவ்விடத்தில் உயர்நிலைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மழைகாலத்தில் சாத்தியக்கூறு இல்லை என்றாலும் கோடை காலத்தில் இதற்கான பணியைத்தொடங்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.
(படவிளக்கம்)
அம்புலி ஆற்றில் தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீரில் கடந்துசெல்லும் மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக