செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மேல்மங்களத்தில் குடிநீருக்காக குளத்தில் குழி தோண்டும் மக்கள். செப்.15. R

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்களத்தில் தண்ணீர் தேங்கியுள்ள குளத்தில் குழி தோண்டி, ஊறும் தண்ணீரை மக்கள் காத்திருத்து பிடித்துச் செல்கின்றனர்.
அறந்தாங்கியில் இருந்து நாகுடி செல்லும் சாலையில் உள்ள மேல்மங்களம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
இதையடுத்து, அங்குள்ள குளத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சுமார் 2 அடி ஆழத்துக்கு குழிகளைத் தோண்டி அவற்றில் ஊறும் தண்ணீரை பிடித்துச் சென்று குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மழை, வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்துக்கு இடையே தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.
எனவே, வேறு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து இக்கிராமத்துக்கு விநியோகிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:
குழாய் தண்ணீர் உப்பாக இருப்பதால் அதை குடிநீராக பயன்படுத்துவதில்லை. லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்துவோம். அதுக்கும் வசதி இல்லாதோர் குளத்தில் ஊற்று தண்ணீரை எடுத்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.
ஒரு குடம் நிரம்ப சுமார் 2 மணி நேரமாகும். குளத்தில் தண்ணீர் சூழ்ந்திருந்தாலும் மேடான பகுதியில் குழிகளை தோண்டி ஊற்றுத் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். மழை காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் இதுதான் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
குடிநீர் கஷ்டத்தை போக்குவதற்கு வேறு ஊரில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குடிநீர் கொண்டு வந்து மேல்மங்களம் கிராமத்துக்கு விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக