ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

அண்ணே ஊருல இல்ல.. ஸ்ரீரங்கத்துல ஓட்டுக்கேட்குறாரு.. நம்பலேன்னா பேஸ்புக்கைப் பாருங்க………



 திருச்சி மாவட்டம்  ஸ்ரீரங்கம்  இடைத்தேர்தலில்  வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் கட்சியினர் முகநூலில்  பதிவேற்றுவதிலும் தவறுவதில்லை.
  ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடும்   அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து  அந்தந்த கட்சியினர்  மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம்  சூடுபிடித்துள்ளது.
   இதில் தேர்தல் பணிகளுக்காக  அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள்,  ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள்ஊராட்சித் தலைவர்கள்  போன்ற மக்கள் பிரதிநிதிகளும், அந்தந்தக் கட்சிகளின்  பொறுப்பாளர்களும்  தமிழகமெங்கிலும் இருந்து வந்து ஸ்ரீரங்கத்தில் பல நாட்களாக  முகாமிட்டுள்ளனர்.
   இதில் கட்சியின் உண்மை விசுவாசத்துக்காக வந்தோரும் உண்டு,  உள்ளூரில் உள்ளோரின் தொல்லை தாங்கமுடியாமல்  வந்துள்ளோரும் உண்டு.
  இவ்வாறு    தொகுதியில் வாக்காளர்களை  முழுநேரமும்  சந்திக்கிறார்களோ இல்லையோ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது  அழைத்துச்சென்றுள்ள உதவியாளர் மூலம்  செல்போனில்   விதவிதமாக படம் எடுத்து அதை முகநூலில் பதிவேற்றும் பணியை தவறாது செய்து வருகின்றனர்.
   சொந்தஊரில் குடிநீர், தெருவிளக்கு,  பரிந்துரைக்கடிதம் போன்ற தேவைகளுக்காக மக்கள் பிரதிநிதிகளை  சந்திக்க செல்வோரிடம்  அண்ணே  ஸ்ரீரகத்துக்கு ஓட்டுக்கேட்கப் போயிருக்காரு என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
    மேலும்,  நம்பாதவர்களிடம்   பாருங்க  ஸ்ரீரங்கத்துல  கையில நோட்டீசும், கொடியுமா    அமைச்சரோட சென்று  மக்களுக்கிட்டை ஓட்டுக்கேட்குறத  என செல்போனில் முகநூல்பக்கத்தைக் காட்டி நம்ப வைக்கிறார்கள்.
    அதிலும், பலரோ  இந்த நேரத்துல  உள்ளூரில் இருந்தால்  மாற்றுக்கட்சியினர் மட்டுமல்ல நம்ம கட்சிக்காரங்களே இவருக்கெல்லாம் கட்சியில  எங்கப்பா மரியாதை இருக்கு. இவரையெல்லாம் யாரு  மதிக்கிறாக என்றெல்லாம்  பேசிருவாங்க. அதனாலதான்,  முதல்ல அங்கிருந்து கிளம்பிட்டோம் என்கின்றனர்.
  அதுமட்டுமல்லாமல்இங்கெ இருக்குற அமைச்சர், மாநில நிர்வாகிகளுக்கிட்டை  இப்பவே முகத்தைக் காட்டினாத்தான் பின்னாளில்  பரிந்துரை கோரி  அவுங்களுக்கிட்டைப்  போய் நிற்க (சீட்டுவாங்க) வசதியா இருக்குமேனுதான் என்கின்றனர்.          
  தொகுதியைவிட்டு பிப். 11-க்குள்  வெளியாட்கள்  ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேற வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின்  உத்தரவை பின்பற்றியாவது  சொந்தஊருக்கு  திரும்பட்டும் என்கின்றனர்  உள்ளூர் மக்கள்.

 கே. சுரேஷ்-புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக