புதன், 12 நவம்பர், 2014

கிளிஜோதிடமும் ……. ரிமோட் டேப்ரெக்கார்டரும்……



   புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும்  சாலையில் இலுப்பூர் பேருந்து நிலையத்தில்  கிராமங்களுக்கு செல்வதற்காக ஏராளானோர் அப்பாவி முகத்தோடு கையில் அவரவருக்கேற்றவாறு   பைகளில் சுமைகளுடன்  டவுன் பஸ்ஸூக்காக காத்திருந்தனர்.
    அந்தநேரத்தில் ஒரு பெண் டிவிஎஸ்-50 வண்டியில் வந்து இறங்கினார். அங்கிருந்தவர்களெல்லாம்  வியப்போடு பார்த்தனர். ஒரு பெண் எப்படி வண்டி ஓட்டுதுபாருன்னு….
     அந்தப்பெண்ணோ …. தனது வண்டியை பேருந்து நிலையம் ஓரமாக நிறுத்திவிட்டு  அதனருகே தரையில் ஒரு பிளாஸ்டிக் பாயை எடுத்து விரித்தார். அதில் வண்டியின் முன்பகுதியில் இருந்து கிளிஜோதிடப்பெட்டியை இறக்கி வைத்தார். அதன் மேல் ஒரு டேப்ரெக்கார்ரடையும் அதனருகே  சிறிய பேட்டரிடையும் வைத்து இணைப்புக்கொடுத்தார்.
     கையில் ஒரு குட்டி ரிமோட்டை எடுத்து அமுக்கிய கணம் பக்திப்பாடல்கள்  பரவசமாக ஒலித்தன. இதைக்கேட்டு  அப்பகுதியில் பரந்து  நின்றவர்களின் கவனம் குவிந்தது. அந்த இடத்தை நோக்கி வரத்தொடங்கினர். என்ன நடக்குதுன்னு தெரியாம வேடிக்கை பார்த்தமக்களுக்கு சிறிய விளக்கம்… அதாவது ரூ. 10 கொடுங்க… கிளி சீட்டு எடுத்துப்போடும்….. அதுல எந்த நம்பர் வருதோ அந்த எண்ணுக்கு டேப்ரெக்கார்டரில் இருந்து   கம்ப்யூட்டர் மூலம் கணிக்கப்பட்ட  உங்களுடைய நடப்பை புட்டு புட்டு  வைக்கும் என்றாரே பாருங்க…… அவ்வளவுதான்…..
   அங்கெ இருந்த கிராமத்து ஜனங்க டவுன் பஸ்ஸூக்கு காசு இருந்துச்சோ இல்லையோ……பர்ஸ்… சுருக்குப்பை…. டவுசர் பாக்கெட்டில இருந்தெல்லாம் பணத்தையும், சில்லரையும் தேடி எடுத்து  உனக்கு முன்னாடி.. நான்.. எனக்கு முன்னோடிதான் நீ என அடித்துக்கொண்டு ஜோதிடம் பார்க்க முன்டியடித்தனர்.
   அதிலும் சிலரோ எங்களுக்கு இப்ப பஸ்வரப்போகுது உடனே பாருங்க…..எங்க கஷ்டம் எப்போதீருமுன்னு சொல்லுங்க… ஆயா…. காளியாத்தா.. மாரியாத்தா…. வந்து  இறங்கி கிளிக்கிட்டை சொல்லி நல்ல சீட்டா எடுக்கச்சொல்லு…. தலைமைமுறை தலைமுறையா கஷ்டப்படுறேன் என்றெல்லாம்  வார்த்தைகள் வந்துகொண்டே இருந்தது.
    அதன்படி கூண்டின் கதவு திறக்கப்படுகிறது, விடுதலையாகி வெளிவேறும் கிளி, அடுக்கி வைக்கப்பட்டுள்ள கட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்து போட்டுவிட்டு மீண்டும் தனது அறைக்கே செல்கிறது.
  தனிமைப்படுத்தப்பட்ட சீட்டை எடுத்துப்  பார்க்கும் அந்தப் பெண் அதில் ஏதாவது படம் இருக்கிறது. அதோடு  அந்த சீட்டில் எந்த எண் எழுதப்பட்டிருக்கோ  அந்த எண்ணை ரிமோட்டில் அழுத்துகிறார் அதற்கென ஒரு ஜோதிடம் டேப்ரெக்கார்டரில் சொல்லப்படுகிறது. கேட்கிறார்கள்    அதில் சிலர் குறுக்குக் கேள்வியும் கேட்கிறார்கள். யார் விடை சொல்லுவா?  படிப்பதோ டேப்ரெக்கார்டர்… இருப்பினும் அந்தப்பெ் சாமார்த்தியமாக சொன்னது அமைதியாக இறுதிவரை  கேளுங்கள் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடுமென்று.
  வருத்தம் கலையாத அதே முகத்தோடு…. ஒவ்வொருவராக கலந்தார்கள் கிராமத்தினர். ஆனால்,.  வருமானம்  கொட்டியதால் சந்தோஷமாக  பார்வை நேரத்தை நீட்டிக்கிறார் பெண் ஜோதிடர்.    இதேபோல,,,,  பதிவுசெய்துகொண்டு ஒரு குரூப்பாகவே கிளம்பியிருக்காங்களாம்…. நாட்டுல எப்படியெல்லாம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துராங்க பாருங்க…………….. நல்லாவே யோசிக்கிறாங்க…  நல்லதுக்கு மட்டுமல்ல இதுமாதிரி ஊரை ஏமாத்தவும்தான்…………….


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக