செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

காதல் வளர கள்ளிச்செடியை சிதைக்கும் காதலர்கள்



 புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தில் கல்லைக்குடைந்து சமணர்களின் படுக்கைகள், அழகுபட வரைந்துள்ள ஓவியங்களைக் காண வருவோரில் பாறையில் மழைகாலத்தில் சேமித்த தண்ணீரில் போராடி வாழ்ந்துகொண்டிருக்கும் கள்ளிச்செடியைக் கீறி தாங்கள் வருகையை காதலர்கள் பதிவு செய்வதால் செடியும் மெல்ல மெல்ல அழிந்துவருகின்றன.
 சித்தன்னவாசல் குகை ஓழியம், குன்றின் மேல் பகுதியில் இயற்கை குகையில் அமைந்துள்ள சமணர் படுக்கைகள், சர்க்கர ஓவியங்களைக் காண்பதற்கு வசதியாக அடிவாரத்தில் இருந்து கல்லைக் குடைந்து படிக்கட்டும், பிடித்துச்செல்வதற்கு வசதியாக பக்கவாட்டில் இரும்பினால்  தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில் குன்றின் மேல் பகுதிக்குச் சென்று இயற்கையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளில் தனிமையை விரும்பும் காதலர்கள் அங்குள்ள கள்ளிச்செடி நிழலில் இளைப்பாறுகின்றனர். அப்போது, அந்தக் கள்ளிச்செடியில் கீறி தாங்களது பெயர், முன்னெழுத்துக்கள், தேதி மட்டுமல்லாமல் கவிதையையும் பதிவு செய்துள்ளனர்.
சதைப்பற்றுடனும், பாறையைப் பற்றிக்கொண்டு மழைகாலத்தில் கிடைக்கும் தண்ணீரை உறிஞ்சி தண்ணீர் கிடைக்காத வெயில் காலங்களில் வாழும் தன்மையுடன் நீர் ஆவியாதலைத் தடுக்க பிரத்யேகமாக கொண்டிருக்கும் தடித்த கியூட்டிக்கிளைக் கிழித்து எழுதப்படுவதால் உள்ளிருக்கும் பால் போன்ற திரவம் வெளியேற்றப்படுகிறது.
 இது போன்று  நாள்தோறம் ஏராளமானோர் முயற்சிப்பதாலும், நிகழாண்டு தொடர் வறட்சியினாலும் தேமித்த தண்ணீரையும் கண்ணீர் வடிப்பதுபோல கள்ளிச்செடி இழப்பதால் பெரும்பாலான கள்ளிச் செடியின் காலம் முடிவுக்கு வந்துள்ளது. சில கள்ளிகள் உயிர்விடும் விழிம்பில் உள்ளது.

 ”பாறையைக் கொத்தி தாங்கள் பெயரை ஒரு சேர இணைத்து பதிவு செய்ய முடியாத காதலர்கள், இத்தகைய கள்ளிச் செடியைப் பயன்படுத்துவது அவர்களது காதலுக்கு வேண்டுமானால் சிறப்படையலாம் ஆனால், அதையும் விட சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கள்ளிச் செடியை  காயப்படுத்த வேண்டாமே. உண்மையாக நேசிப்பவராக இருந்தால் தண்ணீர் ஊற்றுங்கள், தண்ணீரை எடுக்காதீர்கள் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர், இலுப்பூர் ஆசிரியர் கே. வேலுச்சாமி.  இதுவே, இயற்கையை நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.